ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய அஜித்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், ‘வலிமை’ படத்திற்குப் பிறகு, தற்போது எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஏ.கே. 61’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு இடையில் லண்டனுக்கு குடுபத்துடன் சுற்றுலா சென்றுவந்த நடிகர் அஜித், பின்னர் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 47-வது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். இதில், நடிகர் அஜித்தின் அணி பல்வேறு பதக்கங்களை வென்றது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை விமானநிலையத்தில் பேருந்தில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்ளும் வைரலாகின. இந்நிலையில், ‘உங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ளவும்’ என்றும் நிபந்தனையற்ற அன்புடன் அஜித் என்ற பதிவை, அவரின் மேலாளர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எதற்காக அஜித் இவ்வாறு திடீர் அறிவுரை கூறியுள்ளார் என்று தெரியவில்லை என்றாலும், அவரது ரசிகர்கள் இந்த பதிவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.