இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்போம் -மாநிலத் தலைவர் அண்ணாமலை

இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலின்றி தமிழக கடற்தொழிலாளர்கள் பாக் ஜலசந்தியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு வசதியாக கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க மத்திய அரசாங்கத்திற்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் வைத்து நேற்று செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 1972ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டு, அது தீர்க்கப்பட்ட விவகாரம் என்று கூறப்பட்டது.

எனினும் அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம்

நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் கடற்தொழிலாளர்களின் நலன் காக்க தீவிரம் காட்டி வருகின்றது. எனவே, தமிழக பாஜக பிரிவு இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.

கச்சத்தீவு கடற்தொழிலாளர்களை விட, தமிழக கடற்தொழிலாளர்களுக்கே மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். கச்சத்தீவு பகுதியில் மட்டுமே கடற்தொழிலாளர்கள் மீன்பிடிக்க முடியும் என்றாலும், இந்திய கடல் எல்லைக்குள் எல்லை நிர்ணயம் செய்வது தர்க்க ரீதியாக சரியானதாக இருக்கும்.

கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்படும் எண்ணிக்கை
2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, இலங்கைக் கடற்படையினரால் கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. கைது செய்யப்பட்டாலும், மத்திய அரசாங்கம் தலையிட்டு அவர்களை பத்திரமாக அழைத்து வந்தது.

எனவே, கச்சத்தீவை மீட்பது தான் அமைதியாக மீன்பிடிக்கான ஒரே வழி, அதை பாஜக மேற்கொள்ளும்’’ என குறிப்பிட்டுள்ளார்.