ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் பயிற்சிவிப்பாளராக லட்சுமண்

லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஜிம்பாப்வே மோதும் ஒரு நாள் போட்டிகள் வருகிற 18, 20, 22-ந்தேதிகளில் ஹராரேயில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான வி.வி.எஸ்.லட்சுமண் செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை லட்சுமண் கவனிப்பார்.

இதனால் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வு எடுத்துக் கொண்டதாக அர்த்தம் கிடையாது. அவர் ஆசிய கோப்பை போட்டிக்காக வருகிற 23-ந்தேதி அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார். இரண்டு தொடருக்கு இடையே குறைந்த கால இடைவெளி மட்டுமே இருப்பதால் ஜிம்பாப்வே தொடருக்கு பயிற்சியாளராக லட்சுமணை நியமித்துள்ளோம்.

லோகேஷ் ராகுல், தீபக் ஹூடா இருவரும் ஜிம்பாப்வே தொடர் முடிந்ததும் ஹராரேயில் இருந்து விமானம் மூலம் துபாய் வந்து ஆசிய கோப்பை அணியினருடன் இணைந்து கொள்வார்கள்’ என்றார்.