சூடாக டீ குடிப்பவர்களுக்கு ஏற்ப்படும் பாதிப்பு!

டீயை சூடாக பருகுவதற்கு தான் நிறைய பேர் விரும்புகிறார்கள். அப்படி பருகுவதுதான் தொண்டைக்கு இதமாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள். ஆனால் அதுவே தொண்டைக்கும், உணவு குழாய்க்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மிக அதிகமான சூட்டில் அதாவது 140 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் டீ பருகினால் உணவுக்குழாய் புற்றுநோய் உருவாகக்கூடும் என்கிறார், ஆய்வை மேற்கொண்ட டாக்டர் பர்ஹத் இஸ்லாமி. ”காபி, டீ போன்றவைகளை தயாரித்து சில நிமிடங்களாவது ஆறவைத்து மிதமான சூட்டில் பருகுவதுதான் சரியானது.

டீ தயாரித்து முடிப்பதற்கும் – பருகுவதற்கும் இடையே குறைந்த பட்சம் 4 நிமிடங் களாவது இடைவெளி இருக்க வேண்டும்” என்றும் சொல்கிறார். டீ மட்டுமின்றி சூடான எந்தவொரு பானமாக இருந்தாலும் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருந்தால் பருகக்கூடாது. டாக்டர் பர்ஹத் இஸ்லாமி தலைமையிலான ஆய்வு குழுவினர் 40 வயது முதல் 75 வயதுக்குட்பட்ட டீ பிரியர்கள் 50,045 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.

தற்போது உணவுக்குழாய் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தொண்டையில் இருந்து வயிற்றுக்கு உணவு செல்லும் உணவுக் குழாயின் உள் பகுதி செல்களில் இந்த புற்றுநோய் உருவாகிறது. இது இந்தியாவில் அச்சுறுத்தும் புற்றுநோய் வகைகளில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. Tea Coffee