சட்டவிரோத எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கிய சந்தேக நபரை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி நகரப் பகுதியில் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது சட்டத்துக்கு முரணான வகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 பரல்கள் அடங்கிய 6000 லிட்டர் டீசல் 210 லிட்டர் பெட்ரோல் என்பன கைப்பற்றப்பட்டது.

மேற்படி மீட்கப்பட்ட சான்று பொருட்களும் குறித்த சந்தேக நபரையும் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் நீதிமன்ற நீதவான் பி ஆர் ஸ்மாத் ஜெமில் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மன்றின் உத்தரவு

எரிபொருளுக்காக மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற இக்காலகட்டத்தில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து இவ்வாறு பெருந்தொகையான எரிபொருள் மூன்றாவது நபருக்கு விற்பனை நோக்கில் வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு குறித்த எரிபொருளை வழங்கிய எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மற்றும் முகாமையாளர் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து குறித்த சந்தேகநபர்களை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு உதவிப் பொலிஸ்அத்தியட்சகருக்கு மன்று கட்டளையிட்டுள்ளது.