நைஜீரியா எண்ணெய் ஆலையில் பாரிய தீ விபத்து!

நைஜீரியாவில் சட்ட விரோதமாக செயல்பட்ட எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.

இந்நிலையில்,ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறிப்பாக,அடையாளம் தெரியாத எரிந்த உடல்கள் அப்பகுதியில் சிதறிக் கிடக்கின்றன.இந்த பெரும் விபத்துக்கு பிறகு சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும்,தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து,நாட்டின் எண்ணெய் வளங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக,நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத சுத்திகரிப்பு ஆலைகளை சோதனை செய்து அழிக்க அரசாங்கம் இராணுவத்தை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.