பிரபல தமிழ் பட நடிகையும் அவரது கணவரும் கைது!

பிரபல நடிகையும், எம்.பியுமான நவ்நீத் கவுர் கணவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார்.

தமிழில் விஜய்காந்துடன் அரசாங்கம் திரைப்படத்தில் நடித்தவர் நவ்நீத் கவுர். இவர் அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் எம்.பியாகவும் உள்ளார்.

இந்நிலையில் சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிர மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் சாலீசா பாடப் போவதாக, நவ்நீத் ரானாவும், அவரது கணவரும், சுயேச்சை எம்.எல்.ஏ.,வுமான ரவி ரானாவும் அறிவித்தனர்.

அதனை படித்து மாநிலத்தில் உத்தவ் தாக்கரே அமைதியை நிலைநாட்ட வேண்டும். மாநிலத்தின் நலன் கருதி உத்தவ் தாக்கரே அனுமன் சாலீசா பாட வேண்டும் எனக் கூறியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் அவர்கள் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மும்பை பொலிசார், சட்டம் – ஒழுங்கை பாதிக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்ததுடன், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் பாதுகாப்பை பலப்படுத்தினர். ரவி ரானா மற்றும் நவ்நீத் ரானா வீட்டின் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நவ்நீத் ரானா மற்றும் அவரது கணவர் ரவி ரானா இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். சிவசேனா கட்சியினர் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக அளித்த புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.