ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுடன் இணைந்த ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை!

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள சில போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

அமைதியான முறையிலான ஒன்றுகூடல் மற்றும் போராட்டங்களின் போது கருத்து தெரிவிப்பதற்காக உரிமைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை அவசரகால பிரகடனம் மற்றும் சமூக ஊடகங்கள் மீதான தடை ஆகியவற்றால் தாம் மிகவும் கவலையடைவதாகவும் ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கூறியுள்ளது.

அத்துடன் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிகத்தை அதிகமாகப் பயன்படுத்துவதையும் கண்டிப்பதாக அறிவித்துள்ளது.

வெளிநாட்டு கடன், ஊழல் மற்றும் கொரோனா நெருக்கடி ஆகியவற்றின் தாக்கம், நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ள நிலையில் அனைத்து மனித உரிமைகளும் மதிக்கப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறும் ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.