ஜெயலலிதாவின் மரணம் குறித்து மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ள திடீர் வாக்குமூலம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பரபரப்பான வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.

சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்பு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானார்.

இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் பல கருத்துக்களை கூறிவந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

ஆனால் மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், இரண்டு ஆண்டுகள் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டது.

பின்பு உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எய்ம்ஸ் இயக்குநர் பரிந்துரையின்படி 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

அதில் சசிகலா தரப்பு மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கிய நிலையில், அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா 2016ம் ஆண்டு முதலமைச்சராக பதவி ஏற்கும் நாளுக்கு முன்பே அவருக்கு தலைசுற்றல், மயக்கம் இருந்ததால் ஓய்வு எடுக்கக் கோரிய போது, தனக்கு 16 மணிநேரம் வேலை இருப்பதாக கூறி ஓய்வெடுக்க மறுத்துவிட்டாராம்.

இதனால் சில மருந்துகள் மற்றும் உடற்பயிற்சியினை மட்டுமே பரிந்துரை செய்து பின்பு, மருத்துவர் சிவக்குமார் அழைத்தனின் பேரில் பதவி ஏற்புக்கு முந்தைய நாள் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவிற்கு குறித்த மருத்துவர் சென்றுள்ளார்.

அப்பொழுதே ஜெயலலிதா யாருடைய துணையில்லாமல் நடக்க முடியாமல் இருந்ததால், சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்க ஜெயலலிதாவுக்கு பரிந்துரை செய்ததாக குறித்த மருத்துவர் கூறியுள்ளார்.