நாட்டின் வானிலை மாற்றம்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மார்ச் 02 இரவு முதல் மார்ச் 04 வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலி, மாத்தறை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வரை வீசக்கூடும்.

தற்காலிகமாக பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களிலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளிலும் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.