வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனோ நோயாளி மாயமானமை தொடர்பில் பொலிசில் முறைப்பாடு

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம்- மீசாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

காய்ச்சல் காரணமாகக் கடந்த 16ஆம் திகதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

நோய் தீவிரமடைந்ததால் அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மறுநாள் 17ஆம் திகதி அவரது மனைவி யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று பார்த்தபோது கணவனை அங்கு காணவில்லை.

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.