ஒமிக்ரோனுக்கு எதிரான தடுப்பூசி தொடர்பில் வெளியாகிய தகவல்

ஒமைக்ரோனுக்கு எதிராக அஸ்ரா செனெகா நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசியான வேக்சேவ்ரியா தடுப்பூசி நன்கு செயல்படுவதாக ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறித்த தடுப்பூசியினை பூஸ்டர் டோசாக செலுத்துவதனால் ஒமைக்ரோனுக்கு எதிராக அதிக நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்குகின்றது.

மேலும் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்ட பிறகு, கோவிட்டின் திரிபுகளான பீட்டா, டெல்டா, ஆல்பா மற்றும் காமா என்பவற்றிற்கு எதிராகவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது கண்டறியப்பட்டுள்ளது என அஸ்ரா செனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ரா செனெகா நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்த கோவிட் தடுப்பூசியினை, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்ட்டியூட் ஒஃப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகின்றது.

அஸ்ரா செனெகா/ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி சோதனைகளின் புதிய தரவு, ஒமிக்ரோனுக்கு எதிராக மூன்று டோஸ்கள் நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இது ஊக்கமளிக்கும் செய்தி என ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுவின் தலைமை ஆய்வாளரும் இயக்குநருமான பேராசிரியர் சர் ஆண்ட்ரூ ஜே பொல்லார்டின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.