வெள்ளத்தில் மிதக்கும் வாழைச்சேனை பிரதேசம்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை பெய்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.அத்துடன் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாழ் நிலப்பிரதேசங்கள் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளக்காடாக மாறியுள்ளது.

அத்துடன், சிலரது வளவினுள் நீர் காணப்படுவதுடன் நீர் வடிந்தோட முடியாத நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் மழை தொடர்ச்சியாக பெய்து வருமாக இருந்தால் தாழ் நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் தாழக்கூடிய நிலைமை உருவாகக்கூடும்.

மட்டக்களப்பில் 54.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப்பகுதியில், 66.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 27.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 70.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கிரான் பகுதியில் 88.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

உன்னிச்சைப் பகுதியில் 25.0மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 23.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 91.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 30.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

19 அடி 2அங்குலம் கொள்ளளவுடைய வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 16அடி 8 அங்குலமாகவும், 11அடி 6 அங்குலம் கொள்ளளவுடைய கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 11 அடி 8 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.

அதேவேளை புணாணை அணைக்கட்டின் நீர்மட்டம் தற்போது 7 அடி 7அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாகவும் அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை பகுதிகள் தாழ் நிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மேலும் பல உள்ளுர் வீதிகளிலும், வெள்ள நீர் தேங்கியுள்ளதனால் மக்கள் உள்ளுர் போக்குவரத்துக்களிலும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.