சிலிண்டர் வெடிப்பில் பலியான கோழிக்குஞ்சுகள்

பன்னல பகுதியில் இடம்பெற்ற தீப்பரவலில் சிக்குண்டு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் பலியாகியுள்ளன.

பல்லேகம எலிபிச்சிய பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.20 மணியளவில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளன.

நீர்கொழும்பு பகுதியில் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 17 ஏக்கர் காணியில் கோழிப்பண்ணை அமைந்துள்ளது. குறித்த கோழிப்பண்ணையில் சுமார் 35,000 குஞ்சுகளை அடைக்கக்கூடிய ஏழு கூடங்கள் உள்ளன. அதில் ஒரு கூடத்தில் இவ்வாறு தீப்பிடித்துள்ளது.

கோழி குஞ்சுகளுக்கு தேவையான வெப்பத்தை ஏற்படுத்த 37.5 கிலோகிராம் எடையுள்ள மூன்று எரிவாயு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும் நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை. பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.