சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் புதிய மாற்றம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (The Department of Motor Traffic )சாரதி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்திலேயே அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

அன்றைய தினமே சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் போது மோசடிகள் நடப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் அலுவலகத்தில் இப்படியான மோசடிகள் சம்பந்தமாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு (Dilum Amunugama) கிடைத்த சில முறைப்பாடுகளை அடுத்து, இந்த நடவடிக்கையை நிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எழுத்து மூலம் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பின்னர், செயன்முறை பரீட்சையில் தேர்ச்சி பெறும் நபர்கள் 500 ரூபாய் செலுத்திய பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் நடைமுறை இருந்து வந்தது.

செயன்முறை பரீட்சையில் தேர்ச்சி பெற்ற தினத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாவிட்டாலும் தற்காலிக அனுமதிப்பத்திரம் கிடைக்கும் என்பதுடன் அதனை பயன்படுத்தி வாகனங்களை ஓட்ட முடியும்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நேரத்தை ஒதுக்கிக்கொண்ட நபர்களுக்கான ஒரு நாள் சேவை மற்றும் ஏனைய சேவைகள் தொடர்ந்தும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.