நீங்கள் ஐயப்பனுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்..!!

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலம் என்றால் அது சபரிமலை தான். மகிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் இங்கு தியானம் செய்ததாக ஐதீகம்.

கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் நேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் செல்ல வலியுறுத்தும் விரதமாக ஐயப்ப வழிபாடு இருப்பதும், சபரிமலை தரிசனத்தை தேர்வு செய்ய ஒரு காரணமாக உள்ளது.

கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்களுக்கு கொண்டாட்டம்தான். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குளிர்ந்த நீரில் குளித்து, உடல் சுத்தம், மன சுத்தத்துடன் அந்த ஐயப்பனின் அருளை வேண்டி காடு, மேடு கடந்து சென்று சரணம் அடைவதில் உள்ள சுகத்தை, அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறிய முடியும்.

எண்ணிலடங்கா இறைவழிபாடுகள் இருந்தாலும், மண்ணில் மனிதனாகப் பிறந்து, இறைநிலையை அடைந்தவரான ஐயப்பனின் வழிபாடு அனைவரையும் கவரும் ஒன்றாக இருக்கிறது.

தான்தோன்றி தனமாக ஊரை சுற்றி வருபவர்களை, ஒரு கால்கட்டு போட்டால் சரியாகிவிடுவான் என்று சொல்ல கேட்டிருப்போம். அந்த கால்கட்டுக்கு திருமணம் செய்து வைத்தல் என்பது பொதுவான பொருளாக இருக்கிறது. ஆனால் கால்கட்டு என்பதற்கு பாதை மாறாது மனதை ஒருநிலைப்படுத்தி வாழ்வது என்பதே சரியான பொருளாகும்.

சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன், குத்து காலிட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில்தான் காட்சி தருகிறார். அவர் தன்னுடைய தவத்தை யாரும் கலைத்து விடக்கூடாது என்பதற்காக மனதை ஒரு நிலைப்படுத்தியபடி அமர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஐயப்பனின் இந்த தரிசனம் எந்த நேரத்திலும், எந்த காரணத்திற்காகவும் தங்கள் இலக்குகளை மனிதர்கள் விட்டுவிடக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக கூறுகிறார்கள்.

ஐயப்பன் வழிபாடு ஏராளமான வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கி உள்ளது. நிலையற்ற இந்த பூலோக வாழ்க்கையில், வாழும் காலத்திலேயே நல்லவராக வாழ்ந்து, பிறவி பெருங்கடலை கடக்கும் எளிய வழியை காட்டுகிறது ஐயப்பன் வாழும் சபரிமலையின் வரலாறு.

ஆடம்பர வாழ்வு நிலையற்றது என்பதை உணர்த்தவே ஐயப்ப பக்தர்கள் எளிமையான ஆடையை, சீருடைபோல் அணிந்து கொள்கிறார்கள். மேலும் அனைவரும் சமத்துவமானவர்கள் என்பதற்காகவே ஒரே மாதிரியாக இருமுடி கட்டி மலையேறுகின்றனர். எனவே ஐயப்ப விரதம் பக்தர்களுக்கு பொன், பொருள் தருவதோடு மட்டுமல்லாமல் ஒழுக்கத்தையும் கற்று கொடுக்கிறது.