சஜித் அணியுடன் கூட்டணி சேரும் அரசியல் கட்சி

அரசின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேறி சஜித் அணியுடன் இணையவுள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பதிவாகிவருகின்றன.

ஆளுங்கட்சியின் அரசியல்வாதிகள், சுதந்திரக்கட்சி இருப்பதால் எவ்வித நன்மையையும் இல்லையென பகிரங்கமாகத் தெரிவித்துள்ளமையை அடுத்து சுதந்திரக் கட்சியின் தலைமை அரசிலிருந்து விலகும் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியாக இணைந்து தேர்தல்களில் போட்டியிடாதிருக்கவும் சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

இதற்கிடையில், அரசின் செயற்பாடுகளால் மக்களின் அதிருப்தி தீவிரமடைந்து வருவதால் அரசுக்கு எதிராக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் பேச்சுகளை ஆரம்பித்துள்ளன.

அதேசமயம் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசிலிருந்து வெளியேற உள்ளதாகவும், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளை இணைத்து பாரிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்கவும் திரைமறைவில் பேச்சுகள் இடம்பெற்று வருவதாகச் செய்திகள் பதிவாகி வருகின்றன.