சீனாவிடம் சரணடைந்த இலங்கை

சீன சேதன உரத்தை இறுதியாக உரிய கப்பல் தாமதக் கட்டணச் செலவுகளுடன் இறக்கி, ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியிருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவித்தன.

9 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உரத்துக்கு, அதை உரிய காலத்தில் இறக்காததால் தாமதத்துக்கான கட்டணமும் சேர்த்து மேலதிகமாக 35 மில்லியன் அமெரிக்க டொலரும் செலுத்தி, அதனை இலங்கை இறக்குவதற்கு இணங்கியிருப்பதாகத் கொழும்பு செய்தி ஒன்று தெரிவித்தது.

மேலும், சீன – இலங்கை நட்புறவில் வீண் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவை இலங்கை அரசாங்கம் எடுத்திருப்பதாக அரச உயர் வட்டாரம் ஒன்றை மேற்கொள்காட்டி செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டது. கேள்விப்பத்திர நடைமுறைக்கு அமைய இலங்கை இந்த சேதன உரத்துக்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு விநியோகக்கட்டளை வழங்கியிருந்தது.

சீன கப்பலில் அனுப்பட்ட உரம் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த சமயத்தில், அதன் மாதிரிகளை பகுப்பாய்வு செய்த இலங்கை தேசிய தாவரங்கள் தனிமைப்படுத்தல் அமைப்பு, இந்த உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருப்பதாக தெரிவித்தது. இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட சோதனைச் சான்றிதழ்கள் அப்படி வந்தமையால், அந்த உரத்தை ஏற்க முடியாது என இலங்கை பெரிய ‘பிகு’ பண்ணியது.

இருப்பினும், இலங்கை அதிகார பீடம் சீன வற்புறுத்தலுக்கு அடி பணிந்து, மண்டியிட்டு, உரிய தாமதக் கட்டணங்களுடன் அதனை இறக்குமதி செய்ய இணங்கியிருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றமை பல மட்டங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவ்விடயம் நீதிமன்று வரைச்சென்றபோதும் இந்த உரத்துக்கான கொடுப்பனவு எதனையும் வழங்கக் கூடாது என சம்பந்தப்பட்ட மக்கள் வங்கிக்கு நீதிமன்றம் இடைக்காலத்தடை உத்தரவு வழங்கியிருப்பதும் உரத்துக்கான கொடுப்பனவை வழங்கத் தவறியமைக்காக இலங்கையின் மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதும் தெரிந்தவைதானே…