மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்… வெளியான தகவல்!

மன்னார் கடற்கரை பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று (13) சனிக்கிழமை காலை மன்னார் கோந்தைபிட்டி கடற்கரையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 வயதுடைய கீர்த்தனா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன்னார் மூன்றாம் பிட்டி பகுதியில் தனது சகோதரருடன் வசித்து வந்த நிலையில் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றிய நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த பெண்ணின் தந்தை சிறு வயதிலே உயிரிழந்ததால் தாயின் பராமரிப்பில் யுவதி மற்றும் இரு சகோதரர்கள் இருந்துள்ளனர். தாய் பல்வேறு கூலி தொழில் ஈடுபட்டு கிடைத்த வருமானத்திலே மூவரையும் பராமரித்து வந்துள்ளார்.

மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் குறித்த பெண் உறவினர் ஒருவருடன் பணியாற்றி வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை 11 ஆம் திகதி பணி முடிவடைந்த பின்னர் மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு சென்றுள்ளார். அதன் போது தனது ஆண் நண்பர் ஒருவருடன் சந்திப்பை மேற்கொண்ட காணொளி வெளியாகியிருந்தது.

பின்னர் வியாழக்கிழமை (11) மாலை மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குற்த்த யுவதி குதித்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை (13) பெண்ணின் சடலம் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த பெண் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை தாய் மற்றும் சகோதரர் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14) காலை வைத்தியசாலைக்குச் சென்று அடையாளம் காட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.