ஜனாதிபதி கோட்டாபய, பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

உலக வாழ் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாளை முன்னிட்டு இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில், அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞான ஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது.

உலகளாவிய இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்புமிக்கதொன்றாக தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது.

இந்துக்களின் ஆன்மீக வழிபாடாகவும் பாரம்பரிய கலாசாரப் பெருவிழாவாகவும் காணப்படும் தீபாவளித் திருநாள் மூலம், வாழ்வின் துன்பங்கள் நீங்கி இன்பங்களை அடைந்துகொள்வதே நோக்கமாகும்.

இந்தத் தீபத்திருநாள், அறத்தின் ஆட்சியையும் ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகும். தாமதித்தாலும் வாய்மையே இறுதியில் வெல்லும் என்பதையும் காரிருள் மறைந்து, இன்பங்கள் பெருகி, நலமும் வளமும் பெருகும் என்பதே இந்துக்களின் நம்பிக்கையாகும்.

சுற்றாடலுடன் ஒன்றுபட்டுள்ள பருவ மாற்றங்களோடு, பண்டைய காலந்தொட்டு மானிடர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஆன்மீகப் பரிமாறல்ளை மிகவும் உற்சாகமாகவும் பக்தியுடனும் கொண்டாடுகின்ற தீபாவளி நன்நாள், சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும், மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்துகின்றது.

தீபாவளித் திருநாளில் பிரபஞ்சத்துக்கு பிரவேசமாகும் சுப சக்தியால் உலக மக்கள் யாவருக்கும் மகிழ்ச்சி, சௌபாக்கியம், செல்வம் மற்றும் தெய்வ அருள் கிடைக்க வேண்டும் என்று, இந்தத் தீபத் திருநாளில் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில், ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக, ஒளி நிறைந்த வளர்ச்சிப் பாதை நோக்கி, பல தடைகளைத் தாண்டி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் நம் தேசம் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே எம் அனைவரினதும் பெருவிருப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.