உறவினர்களை பார்ப்பதற்காக வேனில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி…!

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நான்கு பேர் காயமடைந்திருப்பதாக ஆனமடுவ பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (20) புதன்கிழமை புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்விபத்து சம்பவம் குறித்து தெரியவருவது,

பொலனறுவை பகமூன பகுதியிலிருந்து புத்தளம் கல்லடி பிரதேசத்தில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக வேன் ஒன்றில் சிலர் சென்றுள்ளனர்.

குறித்த வேன் ஆனமடுவ நகரை அண்மித்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, எதிர்த்திசையில் வந்த லொறி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது குறித்த வேன் அருகிலுள்ள சிறிய பாலத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய வேனில் 8 பேர் பயணித்ததாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.