அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் அருகே அடுத்தடுத்து நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.

மெல்போர்ன் நகருக்கு 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மென்ஸ்பீல்ட் (Mansfield) நகரிற்கு அருகில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலில் 5.9 – 6.0 ஆக பதிவானதாகவும் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய நேரப்படி இன்று முற்பகல் 9.15 மணிக்கு விக்டோரியா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, மெல்பர்ன் நகரத்தில் சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மெல்பர்னில் இருந்து தென் கிழக்கே 180 கிலோமீற்றர் தொலைவில் 5.9 ரிச்டர் அளவிலான முதலாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூ செளத் வேல்ஸ் பகுதிகளிலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. 6.0 ரிச்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தை தொடர்ந்து, 4.0 மற்றும் 3.1 ரிடர் அளவில் அடுத்தடுத்த குறைந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் மோசமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார். மேலும் அவுஸ்திரேலியாவில் நில நடுக்கங்கள் அசாதாரணமானவை. அது மிகவும் வருத்தமான நிகழ்வு எனவும் கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். விக்டோரியா மாகாண அவசர சேவை அமைப்பு நிலநடுக்கத்துக்குப் பின்னரான அதிர்வுகளை எதிர்கொள்ள மக்களை எச்சரித்திருக்கிறது. பலவீனமான கட்டடங்களிலிருந்து விலகி இருப்பது, வாகனங்களில் செல்வதை தவிர்ப்பது போன்ற விடயங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சில வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சில பல்லடுக்கு மாடிக் கட்டடங்கள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் விக்டோரியா மாகாணம் எதிர்கொண்ட மிகப் பாரிய நிலநடுக்கம் இதுவாகுமென செய்திகள் தெரிவிக்கின்றன.