முதன்முறையாக பிரபல மலையாள நடிகருடன் கைகோர்த்த இயக்குனர் ராம்

இயக்குனர் ராம் இயக்கும் புதிய படத்தை மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.ஜீவா, அஞ்சலி நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். இதையடுத்து தங்கமீன்கள், தரமணி, பேரன்பு என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். குறிப்பாக இவர் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான ‘தங்கமீன்கள்’ திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றது.

 

இந்நிலையில், இயக்குனர் ராம் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக அஞ்சலியும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகைச்சுவை நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை தயாரித்து வருகிறார். இயக்குனர் ராமும், மலையாள நடிகர் நிவின் பாலியும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை.