ஐபோன் புகைப்பட போட்டியில் இந்தியருக்கு முதலிடம்

2021 ஐபோன் புகைப்பட போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஷரன் ஷெட்டி வெற்றி பெற்று இருக்கிறார்.

ஆப்பிள் நிறுவனம் வருடாந்திர ஐபோன் புகைப்பட போட்டிக்கான வெற்றியாளர்களை அறிவித்து இருக்கிறது. ஆண்டின் சிறந்த புகைப்படக்காரருக்கான முதல் இடத்தை இந்தியரான ஷரன் ஷெட்டி வென்று இருக்கிறார். பூனேவை சேர்ந்த ஷரன் ஷெட்டி தனது ஐபோன் எக்ஸ் மூலம் எடுத்த புகைப்படத்தை சிறந்த புகைப்படமாக ஆப்பிள் தேர்வு செய்துள்ளது.

மொத்தம் 18 பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போட்டியில் ஷரன் ஷெட்டியின் புகைப்படம் வெற்றி பெற்று இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களுக்காக புகைப்பட போட்டியை ஆப்பிள் நடத்தி வருகிறது. ஷரன் ஷெட்டியின் புகைப்படம் ‘பான்டிங்’ தலைப்பின் கீழ் முதல் பரிசை வென்று இருக்கிறது.

ஐபோன் புகைப்பட போட்டியில் கிராண்ட் பிரைஸ் வின்னராக ஹங்கேரியை சேர்ந்த இஸ்வான் கெரிகிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபோன் புகைப்பட போட்டியை ஆப்பிள் கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களுக்காக இந்த போட்டியை ஆப்பிள் நடத்தி வருகிறது. 18 பிரிவுகளுக்கான வெற்றியாளர்களை ஆப்பிள் அறிவித்து இருக்கிறது.

முதல் மூன்று இடங்களை பிடித்த வெற்றியாளர்களுக்கான பரிசு விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதுதவிர 2022 ஐபோன் புகைப்பட போட்டிக்கான அறிவிப்பை ஆப்பிள் வெளியிட்டு உள்ளது. இந்த போட்டியில் சமர்பிக்கப்படும் புகைப்படங்கள் வேறு எந்த போட்டிக்கும் அனுப்பப்பட்டு இருக்கக் கூடாது. மேலும் புகைப்படங்கள் கணினி மென்பொருள்கள் எதிலும் எடிட் செய்யப்பட்டு இருக்கக் கூடாது.