கடும் விமர்சனங்களுக்குள்ளான வீரர்; கண்கலங்க வைத்த இங்கிலாந்து சிறுவனின் கடிதம்!

இத்தாலி அணிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பை பயன்படுத்த தவறிய இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் இருந்து விமர்சனங்களும் இனவாத தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டது.

இத்தாலிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்ட மூவருமே கருப்பினத்தவர்கள் என்பதாலையே, அவர்கள் கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளானார்கள். இதில் நாடு முழுவதும் தமது சமூக சேவைகளால் அறியப்படும், பிரித்தானிய ராணியாரால் MBE பட்டம் பெற்றவருமான மார்கஸ் ரஷ்போர்ட் என்ற வீரரே கடுமையான தாக்குதலுக்கு இலக்கானார்.

இந்த நிலையில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கடிதங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளால் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். அவர்களில் , 9 வயது சிறுவன் Dexter Rosier தாம் ஹீரோவாக கொண்டாடும் மார்கஸ் ரஷ்போர்டுக்காக கைப்பட எழுதிய கடிதம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

குறித்த கடிதத்தை நேரலையில் வாசித்த பிரபல ஊடகவியலாளர் Susanna Reid கண்ணீர் அடக்க முடியாமல் நேரலையில் தேம்பியுள்ளார். அவருடன் அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இன்னொரு ஊடகவியலாளரான Ranvir Singh என்பரும் கண்கலங்கியுள்ளார்.

சிறுவன் Dexter Rosier எழுதிய கடிதத்தில், ஆதரவற்றவர்களுக்கு உதவ கடந்த ஆண்டு நீங்கள் என்னை ஊக்கப்படுத்தினீர்கள், பிறகு நேற்று, அனைத்து பழிச்சொல்லையும் மெளனமாக எதிர்கொண்டு நீங்கள் மீண்டும் என்னை பிரமிக்க வைத்துள்ளீர்கள். உங்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன், நீங்கள் எப்போதுமே எங்களுக்கு ஹீரோ தான் என சிறுவன் Dexter Rosier குறிப்பிட்டுள்ளான்.

குறித்த கடிதத்தை வாசித்த இரு ஊடகவியலாளர்களும் கண்கலங்கியதுடன், இது தான் உண்மையில் இங்கிலாந்தின் முகம் என அவர்கள் சிறுவனின் கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.