மணமணக்கும் நாவூறும் நெய்மீன் குழம்பு: செய்வது எப்படி?

அசைவ பிரியர்கள் அனைவருக்கும் மீன் குழம்பு என்றால் கண்டிப்பாக பிடிக்கும். சிலர் மீன் குழம்பை பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுவார்கள்.

ஆனால் அதே சமயம் முள் குறைவான மீன் தான் நம் அனைவரின் தேர்வாகவும் இருக்கும். அப்படி முள் குறைவான நெய்மீனை எப்படி சுவையாக சமைக்கலாம் என்பதைக் காணலாம்.

தேவையான பொருட்கள்

நெய்மீன் – 8 துண்டுகள்

தேங்காய் எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – 1 கொத்து

இஞ்சி – 2 துண்டு

பூண்டு – 3 பல்

பச்சை மிளகாய் – 4

சின்ன வெங்காயம் – 12

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் – 1 1/2 தேக்கரண்டி

மல்லித்தூள் – 1 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி

புளி- சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை:

மீனை உப்பு போட்டு கழுவி தனியே எடுத்து வைக்கவும்.வெந்நீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டிய புளி தண்ணியையும் எடுத்து வைக்கவும்.அடுப்பில் மண்பானை அல்லது கடாயை மிதமான சூட்டில் வைக்கவும்.

தேங்காய் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு சேர்த்து பொரியவிடவும். கடுகு வெடித்த பின் அதில் வெந்தயம் சேர்த்து பொன்னிறம் வரும்வரை தாளிக்க வேண்டும்.

அடுத்து கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் அதில் சின்ன வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லி தூள், மிளகு தூள் சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்.

புளி கரைசலை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். புளித்தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் நெய்மீனை போட்டு மூடி வைக்கவும்.

மீன் 5 நிமிடத்தில் வெந்து விடும் என்பதால், தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். குழம்பு சுண்டியதும் இறக்கி, அதில் கறிவேப்பிலை இலைகளைத் தூவி சாதத்துடன் பரிமாறவும்.