யாழிற்கான 2ஆம் கட்ட தடுப்பூசி தற்போதைக்கு இல்லை- சுகாதார அமைச்சு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன் இரண்டாம் கட்டத்துக்குரிய தடுப்பூசிகள் இந்த வாரம் அல்லது தற்போதைக்கு வழங்கப்படமாட்டாது என கொழும்பு சுகாதார அமைச்சு வடக்குமாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு நேற்று மதியம் திடீரென அறிவித்துள்ளது.

இலங்கைக்கு இந்த மாதம் முதல் வாரத்தில் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் நிலையல் அவற்றில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இரண்டாம் கட்டத்துக்கு வழங்கப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றுவது தொடர்பில் ஆராயும் கூட்டம் இடம்பெற்று கொண்டிருந்தபோது இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் இந்தவாரமோ அல்லது இப்போதைக்கோ வழங்கப்படமாட்டாது என்ற விடயம் கொழும்பு சுகாதார அமைச்சு அதிகாரிகளால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தடுப்பூசி திட்டத்துக்கு அமைவாக நாட்டில் 14 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸை மக்கள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு இரண்டாவது டோஸ் ஏற்றுவதற்கே இலங்கைக்கு நாளை வரும் 10 லட்சம் தடுப்பூசிகளும் பயன்படும்.

அதேபோன்று நேற்று முன்தினம் வந்த 10 லட்சம் தடுப்பூசிகளில் 4 லட்சம் தடுப்பூசிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.