வடக்கில் நேற்று(19) மட்டும் 137 பேருக்கு கொரோனா….

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை இன்று (19) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 840 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 137 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 23 பேரும், வவுனியா மாவட்டத்தில் 3 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 பேரும் என 137 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் 38 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் 16 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 9 பேர் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள். வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் இருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கும், கோப்பாய் வைத்தியசாலையில் இருவருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நான்கு பேருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 28 பேருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், காரைநகர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.