8 வயது தம்பியை கொலை செய்த அண்ணன்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்தாரா மாவட்டத்தை சார்ந்த தம்பதி, கர்நாடக மாநிலத்தில் விவசாய கூலித்தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் 10 வயதுடைய மகன் மற்றும் 8 வயதுடைய மகன் இருக்கின்றனர்.

இவர்கள் இருவரில் இளைய மகன் மீது பெற்றோர் அதிகளவு பாசம் வைத்துள்ளதாக கருதிய மூத்த சகோதரன், பெற்றோர்கள் மீது கோபத்தில் இருந்து வந்தததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று சிறுவர்களை வீட்டில் விட்டுவிட்டு பெற்றோர் பணிக்கு சென்றுள்ளனர்.

வீட்டிற்குள் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்களுக்கு இடையே திடீரென சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அண்ணன் தனது தம்பியை கோடரியால் தாக்கியுள்ளான். தம்பி கழுத்தில் வெட்டுக்காயம் வாங்கிய சூழலில் உயிருக்கு போராடி உயிரிழந்துள்ளான்.

வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களின் இளையமகன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் காவல் துறையினரின் விசாரணையில் தம்பியை அண்ணன் கொலை செய்தது உறுதியாக, அண்ணனை கைது செய்த காவல் துறையினர் சிறுவர் காப்பகத்தில் அடைத்துள்ளனர்.

சூர்யா ரகுவரன் நடித்த பட பாணியில் அரங்கேறியுள்ள இக்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.