சீன ராக்கெட் விழுந்த இடம் அறிவிப்பு

கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட்டின் 18 டன் எடை கொண்ட மிகப்பெரிய பாகம் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அருகே விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

மக்கள் வசிக்கும் பகுதியில் குறித்த ராக்கெட்டின் பாகங்கள் விழ வாய்ப்புள்ளதாக முதலில் அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறாக நிகழாமல் தற்போது இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சீனா தனது விண்வெளி நிலையக் கட்டமைப்புக்காக கடந்த மாதத்தில் சீனா லாங் மார்ச் – 5பி என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.

இதன் பணி நிறைவடைந்துவிட்டாலும், இந்த ராக்கெட்டின் பாகம் இப்போது கட்டுப்பாடு இல்லாமல் பூமியை நோக்கி வந்தது.

18 டன் எடை கொண்ட ராக்கெட்டின் பாகம் பூமியில் எங்கு விழும்? என்ன மாதிரியான விளைவுகளை இது ஏற்படுத்தும் என்பது உலக நாடுகளில் விவாதமாக இருந்தது.

அப்படி பூமியில் விழும்போது ஏற்படும் விளைவுகள் குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவும் தொடங்கினர். தற்போது இந்த ராக்கெட்டின் பாகம் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அருகே விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை பூமியின் காற்று மண்டலத்துக்குள் வந்த ராக்கெட்டின் பாகம் சிறிது நேரத்தில் இந்திய பெருங்கடலில் விழுந்து சிதைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் காற்று மண்டலத்துக்குள் இந்த ராக்கெட் பாகம் நுழையும்போது பெரும்பகுதி எரிந்துவிடும் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

விண்வெளி குறித்து ஆய்வு செய்து வரும் ஸ்பேஸ் டிராக் முகமையும் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.