புனேவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அணையில் விழுந்து நீரில் மூழ்கிய நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் பலியாகினர்.
மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பார்செட் பகுதியிலிருந்து, புனே நோக்கி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையோரம் உள்ள தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள அணையில் பாய்ந்தது.
இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அணையில் இருந்த காரினை அதிகாரிகள் விரைந்து மீட்டுள்ளனர். ஆனால், காரில் இருந்த தாய் மற்றும் மகள் உட்பட 4 பேர் பலியாகினர்.
குடும்ப தலைவர் மட்டும் எப்படியோ நீந்தி கரைக்கு வந்துவிட்ட நிலையில், அவரின் கண்முன்னே அவரது குடும்பம் பரிதாபமாக துடிதுடித்து பலியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.