கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் சுகாதார பிரிவு மௌனம்..!!

கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட சுகாதார பிரிவினர் மௌனம் காத்து வருகின்றதாகவும், உண்மை நிலைமைகளை மூடி மறைக்க முற்படுவதாகவும் பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதுவரை குறித்த ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் 39க்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் தொடர்ச்சியாக ஆடைத்தொழிற்சாலை இயங்கி வருகிறதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த தொழில்சாலைக்கு பெரும்பாலும் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் இருந்தும் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்கள் சென்று வருகின்றனர்.

இவ்விரண்டு ஆடைத்தொழிற்சாலைகளிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் பணியாற்றுகின்றனர். எனவே இவர்களில் ஏற்படுகின்ற பாதிப்பு மாவட்டத்தின் அனைத்து குக்கிராமங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பிரதேசங்களையும் பாதிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இந்த விடயத்தில் சுகாதார பிரிவினர் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை மாவட்ட சுகாதார பிரிவின் இளநிலை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில்,

‘ஆடைத்தொழிற்சாலை ஒன்று தங்களுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் மற்றையது சுகாதார துறைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் தனிமைப்படுத்தப்பட்ட பணியாளர்களையும் கட்டாயப்படுத்தி பணிக்கு அழைப்பதாக முறைப்பாடு தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனினும் பொறுப்பான சுகாதாரதுறை உயரதிகாரிகள் இவற்றை கண்டுகொள்ளவில்லை’ என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

‘இதன் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆடைத்தொழிற்சாலைக் கொரோனா கொத்தணி ஒன்று ஏற்படுமாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் குறித்த ஆடைத்தொழிற்சாலைகளது நிர்வாகத்தினரும் மாவட்ட மற்றும் மாகாண சுகாதாரத்துறை உயரதிகாரிகளுமே ஏற்க நேரிடும்’ எனவும் இளநிலை சுகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.