உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திதான் அனைத்து நோய்த் தொற்றிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகும்.
எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே எல்லா ஜீவராசிகளுக்கும் இருக்கும், ஆனால் நம்முடைய உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளினால் எதிர்ப்பு சக்தி குறைந்து நம்முடைய உடலில் பலவித பிரச்சினைகள் உண்டாகும்.
எனவே இதைத் தடுப்பதற்கு நாம் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
அந்தவகையில் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கைமுறையில் அதிகரிக்க கூடிய உணவொன்றை பற்றி தற்போது இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- நெல்லி வற்றல் – 250 கிராம்
- தோல் நீக்காத கறுப்பு உளுந்து – 150 கிராம்
- க.பருப்பு – 100 கிராம்
- வெந்தயம் – 25 கிராம்
- கறிவேப்பிலை – கைப்பிடி அளவு
- வரமிளகாய் – காரத்துக்கேற்ப
- மிளகு – 1 டீஸ்பூன்
- பெருங்காயம் – 10 கிராம் ( கட்டி பெருங்காயம்)
- கல் உப்பு – தேவைக்கு.
தயாரிக்கும் முறை
வெறும் வாணலியில் நெல்லி வற்றலை இலேசாக போட்டு வறுத்தெடுக்கவும். பிறகு க,பருப்பு, கருப்பு உளுந்தை தனித்தனியாக வாணலியில் சேர்த்து வாசனை போக சிவப்பாக மாறும் வரை வறுத்து எடுக்கவும்.
பிறகு மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், கல் உப்பு சேர்த்து வறுத்து அனைத்தையும் தட்டில் கொட்டி ஆறவிடவும்.
சற்று இளஞ்சூடாக இருக்கும் போதே மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
இந்த பொடியை காற்று போகாத கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்து தேவையான அளவு சிறிய பாட்டிலில் கொட்டி பயன்படுத்த வேண்டும்.
வெறும் வாணலியில் ஐந்து டீஸ்பூன் அளவு நல்லெண்ணெய் விட்டு அதில் மூன்று டீஸ்பூன் அளவு பொடியை கலந்து, அரை கப் உதிரான சாதத்தை சேர்த்து கலக்க வேண்டும்.
வீட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஓர் உருண்டை உருட்டி கொடுத்தால் கூட போதுமானது.
தினமும் ஒரு உருண்டை இந்த நெல்லி பொடி சாதம் சாப்பிட்டால் வளரும் பிள்ளைகள் முதல் அனைவருக்கும் செரிமானம் சீராகும்.







