சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம்..!!

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கு ஊடகவியலாளர் தரிசா பஸ்டியன் தடையை ஏற்படுத்தினால் அவரை விசாரணை செய்யலாம் என நீதிமன்றம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதேநேரம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் கடத்தல் தொடர்பான விசாரணையில் பஸ்டியனின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றில் இன்று விசாரணைகள் இடம்பெற்றது.

இதன்போது ஜூன் பத்தாம் திகதியே சிஐடியினர் மடிக்கணிணியை எடுத்துச்சென்றனர் என தரிசா பஸ்டியனின் குடும்பத்தினர் சமர்ப்பித்த சத்தியக் கடதாசியை சட்டத்தரணிகள் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

எனினும் சிஐடியின் சார்பில் ஆஜராகிய அதிகாரி, தரிசா பஸ்டியனின் இந்த தெளிவுபடுத்தலை எதிர்த்ததுடன், தரிசா ஆரம்பம் முதல் விசாரணைகளை குழப்பிவருகின்றார் என குற்றம்சாட்டினார்.

எனினும் மடிக்கணிணி எடுத்துச்செல்லப்பட்ட திகதி குறித்து தரிசா பஸ்டியனின் சட்டத்தரணிகள் தெரிவித்ததை நீதவான் ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பான விசாரணைக்கு தரிசா பஸ்டியன் குழப்பமேற்படுத்தியுள்ளார் என தெரியவந்தால், அவரை விசாரணை செய்யலாம் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கலாம் என நீதவான் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜுன் மாதம் தரிசா பஸ்டியனின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், தரிஷா பஸ்டியனின் மடிக்கணிணியை ஜுன் நான்காம் திகதி சிஐடியினர் எடுத்துச்சென்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார்.

பொலிஸார் இரண்டு தடவை பத்திரிகையாளரின் வீட்டுக்கு சென்றமையினால் இந்த விடயத்தில் குழப்பம் காணப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.