கடித உறையில் போதைப்பொருள்..!!

கொரியர் சேவை ஊடாக கடித உறையில் போதைப்பொருட்களை கடத்தியவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கைது செய்ய தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய் அன்று மாலை தனியார் கொரியர் சேவை ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் கடித உறைகளில் கடத்தப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அம்பாறை புறநகர் பகுதி ஒன்றில் மதுவரி அத்தியட்சகர் மற்றும் அம்பாறை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் 4 சந்தேக நபர்களை போதைப்பொருளுடன் கைது செய்திருந்தனர்.

கைதான நால்வருடன் கஞ்சாவினை தம் வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்ட மற்றுமொரு 43 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரையும் கடந்த புதன் அம்பாறை நீதிமன்ற நீதிவான் ஹன்சதேவ சாமர திவாகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் மதுவரி அத்தியட்சகர் தலைமையில் கைதானவர்கள் தொடர்பிலான புலனாய்வு முடக்கிவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து தனியார் கொரியர் சேவை ஊடாக மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த நூதனமான கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடையதாக நம்பப்படும் அம்பாறை கிளையின் சந்தேக நபரான அதன் முகாமையாளர் மற்றும் விநியோகஸ்தர் என இருவர் கைதாகி இருந்தனர்.

அவர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கமைய இச்சேவையின் கொழும்பு பிரதான நிலைய அதிகாரிகளும் எதிர்வரும் நாட்களில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த தனியார் கொரியர் சேவை ஊடாக கடத்தப்படும் போதைப்பொருட்களை பொறுப்பேற்று பெற வந்தவர்கள் என சந்தேகத்தின் பெயரில் இருவரும் கைதாகியுள்ளனர்.

இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை நீதிமன்ற உதவியுடன் பிடியாணை மூலம் கைது செய்ய முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம் என்றும்,

இவர்களில் முகாமையாளர் சுமார் 45 வயது மதிக்க தக்கவர் எனவும் ஏனைய சந்தேக நபர்கள் 20, 21, 23 வயதினை உடையவர்கள் எனவும் கைதானவர்கள் தொடர்பில் புலனாய்வு நடவடிக்கைகளை முடக்கிவிட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.