கனடாவில் பரபரப்பை கிளப்பிய இலங்கையர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க கோரிய மனு..!!

கனடாவில் வாழ்ந்து வந்த சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவர் தன் மனைவியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2012ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார்.

ஆனால், அவரது வழக்கு 2017ஆம் ஆண்டுதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சிவலோகநாதன் 60 மாதங்கள் அதாவது ஐந்து ஆண்டுகள் சிறையிலிருந்தபின் அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து, நீதிபதி ஒருவர் சிவலோகநாதன் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளத் தேவையில்லை என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

விடுவிக்கப்பட்ட சிவலோகநாதன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டாலும், கனடாவில் அந்த வழக்கு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.

கடந்த அக்டோபரில் வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் வந்த நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றமும் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது.

ஆகவே, அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கனடாவின் அடிப்படை உரிமைகளின்படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் விசாரிக்கப்பட வேண்டும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் Jordan என்பவரது வழக்கின்போது, வழக்கு விசாரணை 30மாதங்களை தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஒரு விதியைக் கொண்டு வந்தது.

சிவலோகநாதன் வழக்கைப் பொருத்தவரை, அது 230 மாதங்கள் அல்ல, 60 மாதங்களைத் தாண்டிவிட்டதால், Jordan வழக்கின் போது விதிக்கப்பட்ட விதிப்படி அவரது வழக்கை இனி விசாரணைக்கு எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

அத்துடன் சரியான நேரத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படுவதன் முக்கியத்துவத்தை அழுத்தந்திருத்தமாக நினைவூட்டிய உச்ச நீதிமன்றம், இப்படி வழக்குகளை தாமதப்படுத்தும் கலாச்சாரத்துக்கு முடிவு கொண்டு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.