தோனியாக நடித்து உலக புகழ்பெற்ற நடிகர் திடீர் தற்கொலை…

பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்(34) தனது வீட்டில் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியாக நடித்து உலகளவில் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

சமீபத்தில் அவரது முன்னாள் பெண் மேனேஜர் திஷா சலியான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

1986ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி பாட்னாவில் பிறந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். ஜி டிவியில் ஒளிபரப்பான பாப்புலர் டிவி சீரியலான பவித்ர ரிஷ்தா மூலம் பிரபலமானவர். 2013ம் ஆண்டு வெளியான கை போச்சே படத்தின் மூலம் பாலிவுட் சினிமா உலகில் ஹீரோவாக நுழைந்தார். சின்னத்திரை டு சினிமா நடிகராக மாறியவர்களில் இவரும் ஒருவர்.

கை போச்சே, பிகே, ரபாட்டா படங்களில் நடித்த இவர், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததன் மூலம் உலகளவில் ஃபேமஸ் ஆனார். தோனியுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வேற லெவலில் வைரலானது. தற்போது இவரது மரணம் திரையுலகத்தை மட்டுமின்றி தோனி ரசிகர்களையும் உடைந்து போக செய்துள்ளது.

சமீபத்தில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் திஷா சலியான், தனது ஃபியான்ஸி உடன் இருக்கும் போது 14வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியது. சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது நெஞ்சே உடைந்து விட்டது என மிகவும் உருக்கமாக பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று 34 வயதான இந்த இளம் பாலிவுட் நடிகர் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் பாலிவுட் மீடியாக்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து பல இளம் பிரபலங்களின் மரணம் இந்திய சினிமா துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் நிலையில், மற்றொரு இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இந்த தற்கொலை பாலிவுட் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் நிலைகுலைய செய்திருக்கிறது. பாலிவுட் பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.