திருமணம் முடிந்த மறுநாளே மனைவி கொடூர கொலை..

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பகுதியை சார்ந்தவர் நீதிவாசன். இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு, அப்பகுதியை சார்ந்த சந்தியா என்ற பெண்மணியுடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் திருமண தேதியும் குறிக்கப்பட்டு, நேற்று இவர்களின் திருமணம் கொரோனா பாதுகாப்பு நிபந்தனை விதிகளுடன் முடிந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் தம்பதிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கொடூரன் புதுமண மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு, புதுமாப்பிள்ளை நீதிவாசன் அங்குள்ள வயல்வெளி பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.