நோய்கள் வராமல் கோடை காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி!!

கோடைக்காலத்தில் குழந்தைகளை எப்படி சமாளிப்பது? கோடைக்காலத்தில் தான் குழந்தைகளுக்கு உடல்ரீதியாக பல்வேறு பிரச்சனைகளும், உடல்நல பாதிப்புகளும் ஏற்படும். எனவே, கோடையில் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கோடையில் குழந்தைகளை நோய்தொற்றில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு என்னென்ன பழங்கள் கொடுத்தால் நன்மை தரும்? என்பதை பற்றி பார்ப்போம்.

கோடையில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய பழங்கள் :

இரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கும் சக்தி மாதுளம்பழத்திற்கு உண்டு. இது, குழந்தைகளின் இதய ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் உதவுகிறது.

கோடைக்காலத்தில் தர்பூசணியை குழந்தைகளுக்கு பழச்சாறாக தராமல், பழமாகவே சாப்பிட கொடுக்கவும். ஏனெனில், உடலில் நீர் வற்றிப்போகாமல் இருக்க பெரிதும் உதவும்.

கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு உடல்சூடு காரணமாக, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தடுக்கும் சக்தி கொண்டது, சப்போட்டா பழம். இந்த பழம் ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

பெரிய நெல்லிக்காயை குழந்தைகளுக்கு அப்படியே கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். அதனால் சிறிது உப்பு, மஞ்சள் கலந்து வேகவைத்து கொடுக்கவும். இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெயில் காலத்தில் பச்சை, கருப்பு, உலர்ந்த திராட்சை என எல்லா வகைகளையும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். இது வெயில் காலத்தில் குழந்தைகளை எளிதில் சோர்வடைய விடாமல் பாதுகாக்கும்.

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரண கோளாறுகளை நீக்க வல்லது. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் அடைவதற்கும் உதவுகிறது.

வெயில்கால மதிய வேளைகளில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு துளி எலுமிச்சை சாற்றை கலந்து தருவது நன்மை தரும்.

சாத்துக்குடியில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது குழந்தைகளின் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். பல், ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு முலாம்பழத்தை துண்டுகளாக்கி சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது உடல்சூட்டை மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சருமப் பிரச்சனையை தடுக்கும்.

கோடைக்காலத்தில் குளிர்ச்சியை தரக்கூடிய பழங்களில் ஒன்று வெள்ளரி. இது குழந்தைகளுக்கு வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணித்து, உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்.