பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டிருப்பது குறித்து கமல்ஹாசன் கடும் கண்டனம்!

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் மிகப் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. அதனால், கச்சா எண்ணெய்யின் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதற்கிடையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது.

அதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி, பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரி 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும் டீசல் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் உயர்கிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவு குறித்து திங்களன்று ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்” என்று கடுமையாக கண்டித்திருக்கிறார் கமல்ஹாசன்