5 வருட ரகசிய திட்டம்! உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்துள்ள நிலையில் சீனா எடுத்த புதிய நடவடிக்கை..

கொரோனா காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சீனா புதிய நடவடிக்கையாக தற்போது டிஜிட்டல் பணத்தை சோதனை முயற்சியில் வெளியிட தொடங்கி உள்ளது.

உலகமே கொரோனா காரணமாக ஸ்தம்பித்து போய் உள்ளது.

இதில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது.

ஒரு பக்கம் உலக நாடுகள் இப்படி திணறி வர இன்னொரு பக்கம் சீனாவில் பொருளாதாரம் சீரடைய தொடங்கி உள்ளது. கொரோனா தொடர்பான உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் சீனாவில் பொருளாதாரம் மிக வேகமாக வளர தொடங்கி உள்ளது.

இந்த நிலையில்தான் சீனா தனது அடுத்த நகர்வை செய்ய தொடங்கி இருக்கிறது. உலக நாடுகளுக்கு உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ள சீனா தற்போது தங்கள் நாட்டிற்குள் டிஜிட்டல் கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

ஆம் சீனாவில் மத்திய வங்கிகள் எல்லாம் சேர்ந்து இப்படி டிஜிட்டல் பணத்தை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக இதன் அளவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

உலகம் முழுக்க பிட் காயின்கள் நிறைய உள்ளது. ஆனால் ஒரு நாட்டு வங்கியே அதிகாரபூர்வமாக டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது இதுதான் முதல்முறை. இந்த டிஜிட்டல் கரன்சி என்பது உங்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்படாது. அதற்கு பதிலாக இந்த டிஜிட்டல் கரன்சிக்கு என்று தனியாக வேலட் ஒன்று அளிக்கப்படும். அதில் இந்த பணத்தை வைத்துக்கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு digital currency/electronic payment (DC/EP) என்று சீனா பெயர் வைத்துள்ளது.

இது சீனாவில் இருக்கும் யென் பணத்தின் டிஜிட்டல் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த digital currency/electronic payment (DC/EP) திட்டத்தை ஐந்து வருடங்கள் ரகசியாக போட்டு, தற்போது சீனா நிறைவேற்றி உள்ளது என்று கூறுகிறார்கள். மிகவும் ரகசியமாக இந்த திட்டத்தை சீனா செயல்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் பணம் தொடர்பில் நிறைய காரணம் சொல்லப்படுகிறது. கொரோனா காரணமாக சீனாவில் இருக்கும் பணம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சீனா மொத்தமாக இந்த நோட்களை கிருமி நீக்கம் செய்துவிட்டது. ஆனாலும் இனிமேல் பணம் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று அஞ்சப்படுகிறது. இதை தடுக்கும் விதமான சீனா இப்படி டிஜிட்டல் கரன்சி பக்கம் செல்ல போகிறது என்கிறார்கள்.

அதோடு மற்ற உலக நாடுகளுடன் சீனா இதேபோல் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த திட்டமிடுகிறது என்கிறார்கள். தற்போது உலகம் முழுக்க வர்த்தகத்திற்கு அதிகமாக அமெரிக்க டொலர் தான் பயன்படுத்தப்படுகிறது. இதை எப்படி மாற்றுவது என்று சீனா இத்தனை வருடங்களாக யோசித்து வந்தது. தற்போது கொரோனா காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா டிஜிட்டல் கரன்சியை களமிறக்கி உள்ளது என கூறப்படுகிறது.