கொரோனாவை ஒழிக்க சுகாதாரமே மருந்து- பாரதிராஜா

கொரோனா வைரஸ் தொற்றினை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் அதற்கு சுகாதாரம் ஒன்றே, தற்போதைய மருந்தென இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையிலேயே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “என் இனிய தமிழ் மக்களே, இயற்கைக்கும், விஞ்ஞானத்திற்கும் நடக்கும், போராட்ட யுத்தத்தில், பல சூழ்நிலை காலக்கட்டங்களில் மிகக் கொடிய அபாய தொற்று நோய்களை கண்டது, நம் பாரத பூமி.

அதாவது நிபா வைரஸ், சிக்கன்குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், ப்ளேக்நோய், ஆந்த்ராக்ஸ், எச்.ஐ.வி. என பல ஒட்டுண்ணிகள் நம் தேசத்தை அச்சுறுத்தியமையை நாம் அறிந்தோம், கடந்தும் வந்தோம்.

அதேபோன்று வளரும், விஞ்ஞானத்தில் கொரோனா போன்ற வைரஸ்கள் ஆச்சிரியமானவை. தனிமனித சுகாதாரமே, தேச நலன் என பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவிற்கும், விழிப்புணர்வு ஏற்பாட்டிற்கும், கைகொடுப்போம்.

நம் தமிழக அரசின் முயற்சியின் வேகங்களும், பாரட்டுக்குறியவை.

இன்று ஒரு நாள் சூரிய ஒளி படாமல் தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். எதிர்ப்பு சக்தியால், பல போராட்டங்களை வென்றவர்கள் நாம். உடல் எதிர்ப்பு சக்தியால் கொரோனாவை கொன்று, விரட்டுவோம்.

சுகாதாரம் ஒன்றே, தற்போதைய மருந்து’ என குறித்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.