ரன் எடுக்க ஓடும் போது சுருண்டு விழுந்து கிரிக்கெட் வீரர் பலி..! மரணத்தில் நீடிக்கும் மர்மம்

இந்தியாவில் உள்ளுர் கிரிக்கெட் போட்டியின் போது இளம் வீரர் ஒருவர் ரன் எடுக்க ஓடும் போது மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டியின் போதே இச்சம்பவம் நடந்துள்ளது.

போட்டியின் போது, ரன் எடுக்க ஓடிய 18 வயதான இளம் கிரிக்கெட் வீரர், எதிர்பாராதவிதமாக ஆடுகளத்திலே சுருண்டு விழுந்துள்ளார்.

உடனே அவர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், வீரரை சோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் டெராபிஷ் கல்லூரியின் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் சத்யஜித் பிரதான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரதான் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று மருத்துவமனை அதிகாரிகளை மேற்கோள் காட்டி பொலிசார் தெரிவித்தனர்.

எனினும், பிரதான் மரணம் தொடர்பாக தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மரணத்தின் சரியான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் என்று பொலிசார் தெரிவித்தனர்.