பாலியல் குற்றச்செயல்களை வைத்திய அத்தியட்சகர் மறைக்கிறார்: குற்றச்சாட்டிற்குள்ளான விசேட தர தாதிய உத்தியோகத்தர்!

இதனைத் தட்டிக் கேட்கும் தன்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டிற்குள்ளான விசேட தர தாதிய உத்தியோகத்தர் செல்வி ஆர்.தேவாமிர்ததேவி தெரிவித்தார்.

கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்திய சாலையில் கடமை புரியும் சிரேஸ்ட தாதி உத்தியோகத்தருக்கு எதிராக சில தாதிய உத்தியோகத்தர்கள் வியாழக்கிழமை(6) மதியம் வைத்தியசாலை முன்றலில் மேற்கொண்ட போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் குற்றச்சாட்டிற்குள்ளான வைத்திய தாதியர் மேற்பார்வையாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

எனக்கு எதிராக இந்த பகிஷ்கரிப்பு மேற்கொண்டிருப்பது வைத்திய அத்தியட்சகர் ஏ. எல். எஃப் .ரகுமான் தலைமையில் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த வைத்தியசாலையில் பல முறைகேடுகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வைத்தியசாலையில் 4 வருடங்களாக பணியாற்றி வரும் எனக்கு தற்போது இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட அனைவரும் கள்ளர்கள் (தாதியர்கள்) என்பது தெரியும். தங்களது பணியை வைத்தியசாலையில் மேற்கொள்ளாது வெளியிடங்களில் செய்து கொண்டு இருப்பவர்கள் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.

அத்துடன் இங்கு (வைத்தியசாலையில்) பல பாலியல் குற்றச்செயல்கள் இடம்பெறுவதாகவும் இதனை வைத்திய அத்தியட்சகர் மூடி மறைப்பதாகவும் இதனைத் தட்டிக் கேட்கும் தன்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை நிர்வாகத்தின் உதவியுடன் சிலர் முன்வைத்துள்ளனர் என கூறினார்.

தொடர்ந்து குற்றச்சாட்டிற்குள்ளான விசேட தர தாதிய உத்தியோகத்தர் செல்வி ஆர்.தேவாமிர்ததேவி கருத்திற்கு மறுப்பளித்து கருத்து தெரிவித்த வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எஃப்.ரகுமான்

குறித்த குற்றச்சாட்டிற்கு உள்ளான தாதியர் மேற்பார்வையாளர் (விசேட தர தாதிய உத்தியோகத்தர்) அனைத்து தாதியர் மீதும் குற்றம் சுமத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவரது கட்டுப்பாடுகளின் கீழ் இயங்காத தாதியர் மீது பொய் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றார். வைத்தியசாலை வளங்களை தவறாகவும் முறைகேடாகவும் பயன்படுத்தி வந்ததை அவதானித்து அதற்கான நடவடிக்கைகள் எம்மால் எடுக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இவர் பணிகளை மேற்கொள்ளும் ஏனைய தாதியர்களை படம் பிடிப்பதுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தெரியாமல் நன்கொடைகளை பெறுவது போன்ற குற்றச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

அத்துடன் எமது வைத்தியசாலையில் வைத்தியசட்ட திட்டங்களை மறைத்து மேலதிக கொடுப்பனவு பணியை மேற்கொண்டதை நிர்வாகம் கண்டித்து அவரால் சட்டவிரோதமாக பெற்றுக்கொள்ளப்பட்ட மேலதிக கொடுப்பனவை மீள பெற நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாகவே மேற்கண்டவாறு தாதியர் மேற்பார்வையாளர் மோசமாக நடந்து கொள்வதாக தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்ட தாதியர் மேற்பார்வையாளர் தொடர்பில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சில தாதிய உத்தியோகத்தர்கள் ஒருமணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு போராட்டத்தை நடாத்தியவர்கள் ஊடகங்களுக்கு உரிய பதிலளிப்பதில் இருந்து தவிர்ந்து வந்தனர். குறித்த போராட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண் தாதியர் அழுததையும் அவதானிக்க முடிந்தது. வலுக்கட்டாயமாக சில தாதியர்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்ட தாதியர் மேற்பார்வையாளர் தொடர்பில் பதிலளிக்குமாறு விண்ணப்பப்படிவம் ஒன்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாயிலையில் பணி புரியும் வைத்திய தாதிய மேற்பார்வையாளர் எதிராக முறைப்பாடுகளை முன்வைத்து அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்றலில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்ட தாதியர்கள் தங்களது கடமைகளை மேற்கொள்ள முடியாமல் இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும், காணொளி மற்றும் புகைப்படங்களை அடுத்து தங்களது பணியினை மேற்கொள்ள முடியாதவாறு உளவியல் ரீதியில் தொல்லை கொடுப்பதாகவும் வைத்திய தாதியர் மேற்பார்வையாளருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.