2018-க்கு பிறகு முதல் சதம் விளாசினார் மேத்யூஸ்..! ஹராரே டெஸ்டில் இலங்கை முன்னிலை

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் நிதானமாக விளையாடி சதம் அடித்து அசத்தியுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 19ம் திகதி ஹராரேவில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி, முதல் இன்னிங்ஸில் 358 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடக்க ஆட்டகாரர்களான பிரின்ஸ் மஸ்வாரெக்-கெவின் கசுசல் அரைசதம் அடித்தனர். அதிகபட்சமாக கிரேக் எர்வின் 85 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை தரப்பில் எம்புல்டினியா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது நாள் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

போட்டியின் நான்காவது நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 370 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணியை விட 12 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றுள்ளது இலங்கை.

எனினும், மேத்யூஸ் 129 ஓட்டங்களுடனும், டிக்வெல்ல 17 ஓட்டங்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

இதன் மூலம் மேத்யூஸ் டெஸ்ட் போட்டியில் தனது 10வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார், மேலும், டிசம்பர் 2018-க்கு பிறகு அவருடைய முதல் சதம் சதம் இதுவாகும்.