முதன்முறையாக தமிழகம் வந்த ரஜினியின் திருப்புமுனையாக அமைந்த அந்த நிகழ்வு

லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று இரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் தனது வாழ்கையில் இடம்பெற்ற அனுபவங்களை இரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

அந்தவகையில் தன்னுடைய சிறுவயதில் நிகழ்ந்த மறக்கமுடியாத, வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த விடயத்தை கூறினார்.

அவர் கூறுகையில், “என்னுடைய சிறுவயது வாழ்க்கையில் நடந்த சில விடயங்களைவும், நான் எப்படி தமிழ் நாட்டுக்கு முதன்முதலில் வந்தேன் என்பதையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

நான் பள்ளியில் படித்த போது நல்ல மாணவனாகவும் நன்றாகப் படிக்கும் மாணவனாகவும் இருந்தேன். ஆனால் என்னை திடீரென பத்தாம் வகுப்பில் ஆங்கில மொழி பள்ளியில் சேர்த்து விட்டார்கள். அதனால் நான் கொஞ்சம் திணறி பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தேன். அதன்பின்னர் அடுத்த வருடம் மீண்டும் தேர்வு எழுதி பத்தாம் வகுப்பில் சித்திபெற்றேன்.

அதன் பின்னர் எனது சகோதரரிடம் ‘என்னை ஏதாவது வேலையில் சேர்த்து விடுங்கள்! எனக்கு படிப்பு எல்லாம் சரியாக வராது’ என்று சொன்னேன். ஆனால் எனது சகோதரர், ‘இல்லை நீ கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும். நம் வீட்டில் வேறு யாரும் படிக்கவில்லை. அதனால் நீ ஒரு வைத்தியர் அல்லது ஐ.பி.எஸ். போன்ற பெரிய படிப்புப் படிக்க வேண்டும்’ என்று முடிவு செய்து என்னுடைய விருப்பத்திற்கு மாறாக என்னை பெரிய பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் சேர்த்து விட்டனர்.

அந்தப் பள்ளியில் படிக்கும்போது எனக்கு சுத்தமாக படிப்பில் நாட்டமே இல்லை. பணக்கார பசங்களுடன் சேர்ந்து திரைப்படங்கள் பார்த்துக்கொண்டு ஊரைச் சுற்றிக்கொண்டு இருந்தேன்.

அப்போது தேர்வு வந்தது. தேர்வுக் கட்டணமாக ரூபாய் 170ஐ எனது சகோதரர் மிகவும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி என்னிடம் கொடுத்து கட்டச் சொன்னார். அந்தப் பணத்தைக் கட்டி தேர்வு எழுதினால் நிச்சயம் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

அதனால் நான் ஒரு முடிவு செய்தேன். அன்று இரவு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூர் ரயில் நிலையத்துக்கு சென்றேன். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ரயில் எங்கே செல்கிறது என்று கேட்டபோது, அது தமிழ்நாடு மெட்ராஸ் இற்குச் செல்கிறது என்று கூறினார்கள். உடனடியாக நான் அந்த ரயிலில் டிக்கெற் எடுத்து ஏறி படுத்துத் தூங்கிவிட்டேன்.

காலையில் விழித்து பார்க்கும் போது சென்னையில் இருந்தேன். சென்னை ரயில்வே நிலையத்தில் இறங்கி நான் வெளியே செல்ல முயன்றேன். அப்போது டிக்கெற் சேகரிப்பாளர் என்னிடம் டிக்கெற் கேட்டார். எடுத்த ரிக்கெற்றை எங்கேயோ தவறவிட்டு விட்டேன் என அவரிடம் நான் விளக்கம் அளித்தேன். கண்டிப்பாக ரிக்கெற் எடுத்தேன் என்று கூறினேன்.

அதன் பின்னர் என்னை ஒரு ஓரமாக நிற்க வைத்துவிட்டு ஏனைய பயணிகள் அனைவரும் சென்ற பிறகு என்னிடம் விசாரித்தார். நீ ரிக்கெற் வாங்கவே இல்லை பொய் சொல்கிறாய் என்று கூறினார். அதற்கு நான் உறுதியாக ‘நான் பொய் சொல்லவில்லை. ரிக்கெற் வாங்கினேன். ஆனால் தொலைந்துவிட்டது’ என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொள்ளாமல் அபராதம் கட்டினால்தான் உன்னை விடுவேன் என்று கூறினார்.

அப்போது அங்கு வந்த கூலித் தொழிலாளிகள் ரிக்கெற் சேகரிப்பாளரிடம் ‘அந்த பையனின் முகத்தை பாருங்கள். அவன் பொய் சொல்கிறவன் போலவா இருக்கிறான்? அவனை அபராதம் கட்டச் சொல்கிறீர்களே. இது நியாயமா?’ என்று கேட்டு அவர்கள் தங்களிடம் இருந்த காசை எடுத்து எனக்காக அபராதம் கட்டினர்.

அப்போதே நான் முடிவு செய்துவிட்டேன். இதுதான் எனது ஊர் என்று” என ரஜினிகாந்த் முதன்முறையாக தமிழகம் வந்த நிகழ்வை கூறினார்.