பலாக்கொட்டை சாம்பார் செய்வது எப்படி..?!

பலாக்கொட்டையில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் உள்ளது. பலாக்கொட்டைச் சாப்பிடுவதால் மூளையும், உடலும் அதிக பலம் பெறும். மேலும் உடலில் உள்ள நரம்புகளை உறுதியாக்கும். இவ்வாறு பல்வேறு பயன்களை உடலுக்கு தரக்கூடிய பலாக்கொட்டையைப் பயன்படுத்தி பலாக்கொட்டை சாம்பார் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

பலாக்கொட்டை – 15
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்
துவரம்பருப்பு – 200 கிராம்
கடுகு – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – சிறிதளவு
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

பலாக்கொட்டை சாம்பார் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பை போட்டு, வேகவைத்துக் கொள்ளவும்.

பின்பு பலாக்கொட்டையை நசுக்கி, மேலே உள்ள தோலை உரித்து, வேகவைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் புளியைப் போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி, அதனுடன் சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்ததும், அதில் வேகவைத்த பலாக்கொட்டைகளையும், துவரம்பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும்.

பின்பு ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து, அதில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, கொதிக்க வைத்துள்ள குழம்பை சேர்த்து இறக்கினால் டேஸ்டான பலாக்கொட்டை சாம்பார் ரெடி.