திருமணமான 6 மாதத்தில் ஏற்பட்ட சோகம்..!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடியை சேர்ந்த நாகராஜின் மகன்,பிரதாப் (வயது 30), முதியநூர் கிராமத்தை சேர்ந்த புட்டுசாமியின் மகள் சரஸ்வதி (23). இவர் பி.இ. சிவில் படித்து முடித்திருந்தார்.

இந்த நிலையில் பிரதாப்புக்கும், சரஸ்வதிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சரஸ்வதி ஐ.ஏ.எஸ். படிக்க விரும்பினார்.

இதனால் காரைக்குடியில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். மேலும் அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் தீபாவளியொட்டி சரஸ்வதி கடந்த மாதம் மெட்டல்வாடி வந்தார்.

அப்போது அவருக்கு கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன வேதனை அடைந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி சரஸ்வதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுவிட்டார்.

இதனால் அவர் வாந்தி எடுத்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி நேற்று முன்தினம் இறந்தார். பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.