சுஜித்தின் பெற்றோர் கேட்ட உதவி இது தான்! நிவாரண காசோலையை கொடுத்த போது கலெக்டர் தகவல்

தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசு வழங்குவதாக அறிவித்த 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது குழந்தை சுஜித், கடந்த மாதம் 25-ஆம் திகதி மாலை வீட்டின் அருகே விளையாடியபோது, அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இதனால் கடந்த 29-ஆம் திகதி உடல் சிதைந்த நிலையில் சுஜித் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான். இந்த சம்பவம் தமிழக மக்களை கண்ணீரில் ஆழ்த்தியது.

இதையடுத்து சுஜித்தின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சுஜித்தின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

அதன்படி தமிழக அரசு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சுஜித்தின் பெற்றோரிடம், திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று வழங்கினார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கும். குழந்தை உடலை மீட்கவே இல்லை என்று பலரும் வதந்தி பரப்பி வரும் நிலையில், குழந்தை சுஜித்தின் உடலில் இருந்து திசுக்கள் எடுக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுஜித்தின் குடும்பத்தினர் அரசு வேலை கேட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.