ஆழ்துளை கிணறு அருகே பக்கவாட்டில் குழி தோண்ட ரிக் இயந்திரம் நிறுத்தும் பணி தீவிரம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் 85 அடி ஆழத்துக்கு சென்றது.

குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கி 24 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில், தற்போது 85 அடி ஆழத்திற்கு குழந்தை சென்றுவிட்டது.  குழந்தையை மீட்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது
ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, 85 அடிக்கு குழி தோண்டி, பக்கவாட்டில் சென்று குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து என்எல்சி, ஒஎன்ஜிசி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழிதோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சுஜித் வில்சன் என்ற 2 வயது குழந்தையை மீட்பதற்காக காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து ராட்சத எந்திரம் ஒரு பெரிய லாரியில் ஏற்றி கொண்டு வரப்பட்டது. இந்த லாரி திருச்சியை தாண்டி மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு 11.30 மணி அளவில் எந்திரத்தை ஏற்றி வந்த லாரி திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பூலாங் குளத்து பட்டி என்ற இடத்தில் பழுதடைந்து நின்றது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த லாரியை பழுதுபார்ப் பதற்காக தொழில் நுட்ப குழுவினர் விரைந்தனர். இது குழந்தை சுஜித்தை மீட்பதில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.  தொடர்ந்து இயந்திரத்தின் பழுது நீக்கப்பட்டு லாரி சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தது.
மேலும் நவீன எந்திரத்தின் மூலம் சிறுவனின் கையில் ஏர் லாக் செய்யப்பட்டு உள்ளது.  அதனைத் தொடர்ந்து ராட்சத எந்திரமான 96 டன் எடையுள்ள ரிக் இயந்திரத்தை  நிறுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் குழியின் பக்கவாட்டில் 3 அடி தூரத்தில் குழி தோண்டி 3 நபர் கொண்ட ஊழியர்களை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிறுவன் குழியில் விழுந்து 35 மணி நேரத்தை கடந்து விட்ட நிலையில் அவன் பத்திரமாக மீட்க பட வேண்டும் என்பது மக்கள் அனைவரது வேண்டுதலாக உள்ளது.